கோவை: கோவை, மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை.
கோவை: மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மத்திய சிறையில் நேற்று கைதிகள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதி விஜய் என்பவர் ரமேஷை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதேபோல் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் நடந்த கொலை தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று கைதியின் கொலை தொடர்பாக பணியின் போது அலட்சியமாக இருந்ததாக சிறை தலைமை வார்டன் முனுசாமி மற்றும் வார்டன் கருப்பசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் வேலுசாமி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினர். அதில் இறந்து போன கைதியின் உடலில் உள்ள மச்சங்கள், காயங்கள், தழும்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருங்கல்லையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மத்திய சிறையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.