கோவை: நீரா பானம் மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை கோவை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கோவை: நீரா பானம் மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை கோவை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தென்னை சாகுபடியில் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாக உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும் 'நீரா' பானத்தை இறக்கவும், அதனைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய 'தமிழ்நாடு நீரா விதிகள் 2017'-யை வடிவமைத்து, அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவர். கோவையில் உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இதன் உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
இதன்மூலம், நீரா பானத்தில் இருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.