கோவை: கடந்த 99 ஆண்டுகளாக இயங்கி வந்த நல்லஆயன் உயர்நிலைப்பள்ளி, மாணவர் சேர்க்கை குறைவால் பள்ளி கல்வித்துறையால் மூடப்படுகிறது.
கோவை: கடந்த 99 ஆண்டுகளாக இயங்கி வந்த நல்லஆயன் உயர்நிலைப்பள்ளி, மாணவர் சேர்க்கை குறைவால் பள்ளி கல்வித்துறையால் மூடப்படுகிறது.
உக்கடத்தை அடுத்துள்ள கோட்டைமேடு பகுதியில் கடந்த 1917-ம் ஆண்டு துவக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1927-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், 1947-ம் ஆண்டு மீண்டும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நல்லஆயன் உயர்நிலைப் பள்ளி, கல்விச் சேவையைத் தொடர்ந்து வந்தது.

அரசின் உதவி பெற்று சுமார் 99 ஆண்டுகளாக இயங்கி வந்த இப்பள்ளி உக்கடம், டவுன்ஹால், சுங்கம் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை சமூகத்தில் தலை சிறந்தவர்களாக உருவாக்கி பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வந்தது. சென்ற கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், இப்பள்ளி மூடப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தனது 100-ம் ஆண்டில் கல்விச் சேவையிலிருந்து விடைபெற்றது நல்லஆயன் பள்ளி.
இதனையடுத்து, இப்பள்ளியில் 1994-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக மாற்று பள்ளிக்கு செல்லும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பிரிவு உபச்சார விழா, கோவை வெரைட்டி ஹால் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் 60 பேர் மற்றும் 22 ஆசிரியர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு நல்லஆயன் பள்ளி பற்றிய தங்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு பிரியாவிடை பெற்றனர்.