கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகளின் நடமாட்டமும் இதனால் ஏற்படும் சேதங்களும் அதிகரித்தபடி உள்ளது. இதுவரை உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டில் இருந்து வெளியேறும் யானைகள் வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வந்தது.
ஆனால், அண்மைக் காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத்துவங்கியுள்ளது. குறிப்பாக நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும் சேதப்படுத்த தொடங்கியுள்ளது.
இரவு நேரங்களில் மட்டும் வனத்தை விட்டு வெளியேறிய யானைகள் தற்போது அதிகாலை நேரத்திலும் வரத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை நெல்லிமலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை அங்குள்ள சமயபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலை வழியாக எவ்வித அச்சமும் இன்றி சென்றது. அதிகாலை நேரத்தில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் காட்டு யானை சாலையில் நடந்து வருவதைப் பார்த்து வீட்டிற்குள் சென்று ஒடி ஒளியும் நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் சமயபுரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி ஆற்றுக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் இரண்டு குடியிருப்பினையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளது.
இதனால் அச்சத்தில் உரைந்துள்ள சமயபுரம் கிராம மக்கள் இனியும் காலம் கடத்தாமல் வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.