கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் சார்பில் கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் சார்பில் கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், போதிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசையும் கண்டித்து கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், சிலர், ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நஞ்சப்பா சாலையில் துவங்கிய மனித சங்கிலி போராட்டம் காந்திபுரம், பவர்ஹவுஸ், கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை என சுமார் 3 கி.மீ தூரத்துக்கு நடைபெற்றது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் திரண்டெழுந்து தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தினால் பா.ஜ.க., அரசைக் கண்டித்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
