காவிரி விவகாரத்தில் 1974-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை தி.மு.க., புதுப்பிக்காமல் விட்டதே பிரச்சனைக்கு முழு காரணம் என்றும் தற்போது தமிழக அரசைக் குற்றம் சாட்டுவது வடிகட்டிய பொய் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: காவிரி விவகாரத்தில் 1974-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை தி.மு.க., புதுப்பிக்காமல் விட்டதே பிரச்சனைக்கு முழு காரணம் என்றும் தற்போது தமிழக அரசைக் குற்றம் சாட்டுவது வடிகட்டிய பொய் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :-
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை ஆறு வாரத்தில் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பு 15 ஆண்டுகள் செல்லும். எனவே மத்திய அரசு அவசியம், இதனை நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம். பிரதமர் கூறியதால் தான் அமைச்சரானதாக ஓ.பி.எஸ்., கூறியது குறித்து எனக்கு தெரியவில்லை. ஓ.பி.எஸ்., இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், இயக்கத்திற்காக பாடுபட்டவர்.
நாங்கள் இருவரும் இணைந்து இயக்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம். ஆனால், ஊடகங்கள் சிறிய விசியத்தையும் பெரிது படுத்துகின்றன.
இன்றய நிலையில் இந்தியாவில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிலை நாட்டப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறவே இணக்கமாகச் செயல்படுகிறோம். இரு கட்சிகளுக்கும் கொள்கை வேறுபாடு உள்ளது. ரஜினி கமல் அரசியலுக்கு வருவதால் எங்கள் இயக்கத்திற்கு பாதிப்பு இல்லை. எங்கள் இயக்கத்தை எவராலும் வெல்ல முடியாது.
தி.மு.க.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசு சரியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சரியாக வாதாடவில்லை என்றும் குற்றம்சாட்டுவது வடிகட்டிய பொய். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கில் 2007-ம் ஆண்டு நடுவர் மன்ற அளித்த தீர்ப்பை அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க., மற்றும் மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு இதழில் வெளியிடவில்லை. ஜெ., தான் சட்ட போராட்டத்தின் மூலமே அரசு இதழில் வெளியிட்டார்.
அ.தி.மு.க., அரசின் முயற்சியால் தான் இன்று காவிரி விவகாரம் ஒரு முழு வடிவத்தைப் பெற்றுள்ளது. இதில் எள் முனை அளவு கூட தி.மு.க.,விற்கு பங்கு இல்லை.
காவிரி நீர் பங்கீட்டில் கடந்த 1892 - 1924-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்காமல் காலாவதியாகியது. இதுவே இந்த பிரச்சனைக்கு முழு காரணம். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.,வினர் இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் விட்ததே இப்பிரச்சனைக்கு மூல காரணமாகும்.
என்று முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி கூறினார்.