அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டும்பொழுது, குடியிருப்புகள் அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பளவில், பத்து சதவிகித நிலத்தை, சிறுவர் பூங்கா அல்லது பொது இடமாக ஒதுக்கிப் பராமரிக்க வேண்டும் என்பது அரசு விதி. குறிப்பாக, பூங்கா இடமாக ஒதுக்கப்பட்ட நிலத்தில், எந்த கட்டடங்களும் எழுப்பப்படக் கூடாது. ஆனால், பெரும்பாலான கட்டட நிறுவனங்கள், இந்த விதிகளை மதிப்பதில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், அவர்களை கண்டுகொள்வதில்லை.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டும்பொழுது, குடியிருப்புகள் அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பளவில், பத்து சதவிகித நிலத்தை, சிறுவர் பூங்கா அல்லது பொது இடமாக ஒதுக்கிப் பராமரிக்க வேண்டும் என்பது அரசு விதி. குறிப்பாக, பூங்கா இடமாக ஒதுக்கப்பட்ட நிலத்தில், எந்த கட்டடங்களும் எழுப்பப்படக் கூடாது. ஆனால், பெரும்பாலான கட்டட நிறுவனங்கள், இந்த விதிகளை மதிப்பதில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், அவர்களை கண்டுகொள்வதில்லை.

வெள்ளானைபட்டி ஊராட்சியைச் சேர்ந்த கைக்கோளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது எலிசியம் நிறுவனத்தாருக்கு சொந்தமான ‘குளோபஸ் கார்டன்’ குடியிருப்பு வளாகம். இங்கு 126 தனிவீடுகள் உள்ளன. இப்பகுதியில், சுமார் 3,500 சதுரஅடி அளவுகொண்ட பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை இந்நிறுவனத்தார் கட்டியுள்ளனர். அரசு வகுத்துள்ள கட்டட விதிமுறைகளை மீறி, பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அகற்றுமாறு, அப்பகுதியில் குடியிருப்போர் கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சுத்திகரிப்பு ஆலையை அகற்றி பூங்கா இடத்தை ஊராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அகற்றுமாறு குடியிருப்போர் சார்பாக , ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கழிவுநீர் ஆலை அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்த உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அகற்றுமாறு அறிக்கை அளித்தனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், பூங்கா இடத்தில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு ஆலையை வரைமுறைப் படுத்திக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை, வரைமுறை படுத்திக்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவு, விதிமுறைகளுக்கு முரணான உத்தரவாகக் காணப்பட்டது.
பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை வரைமுறைப்படுத்துவது, கட்டட விதிமுறைகளை மீறும் செயல் என்று உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் கூறியதை தொடர்ந்து, வரன்முறைப்படுத்துமாறு அளித்த உத்தரவை, மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார். அதோடு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அகற்றுமாறும் புதுஉத்தரவை வெளியிட்டார்.

‘பூங்கா மற்றும் பொது இடங்கள் என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை, வரைமுறை படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு இருப்பதாக, எந்த சட்டமும் இல்லை. அப்படி, ஆக்கிரமிப்புகளை வரைமுறை படுத்த தொடங்கினால், பொது இடங்கலே காணாமல் போய்விடும். பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, அடுக்குமாடி போன்ற நெருக்கமான குடியிருப்புகளில் வசிப்போர், ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக ஒதுக்கப்பட்டவையே, இந்த பூங்கா மற்றும் பொது இடங்கள். இவற்றை, ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில் கொடுப்பது, நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம்.மேலும், குடியிருப்பு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையால், சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது' என்கிறார், அப்பகுதியில் வசிக்கும் செந்தில்.
அரசின் இத்தனை உத்தரவுகளுக்கு பிறகும், பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அகற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குடியிருப்போர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.