கோவையை அடுத்த பீளமேடு பகுதியில் 3 வங்கிகளின் ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு ரூ.30 லட்சம் கொள்ளை போன வழக்கில் கைது செய்யப்பட்ட, கும்பல் தலைவனை 3 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை : கோவையில் அரங்கேறிய ஏ.டி.எம். கொள்ளை தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பீளமேடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 3 வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உடைக்கப்பட்டு ரூ. 30 லட்சம் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளை வழக்கு தொடர்பாக அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் 8 பேரை, நாமக்கல் அருகே வாகன சோதனையின்போது போலீசார் கைது செய்தனர். ஒரு லாரி, 2 கார்கள், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் விசாரிக்கையில், ஏ.டி.எம். கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் தலைவன் அரியானாவை சேர்ந்த இஸ்லாமுதீன்(43) என்பதும், கொள்ளை பணத்தை அவனிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த இஸ்லாமுதீனை தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்பு ஜே.எம்.6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏ.டி.எம். கொள்ளைக்கு தலைவனாக செயல்பட்ட இஸ்லாமுதீனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ராஜவேலு முன்னிலையில் நடந்தது. விசாரணைக்கு பிறகு 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தும், வரும் 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் இஸ்லாமுதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.