லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பேராசிரியர் நியமனத்துக்காக 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சார்பாக ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கை மூன்று னத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அதன்படி, போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் துணைவேந்தர் கணபதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, முதல்வகுப்பு கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதி தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு (பிப்.,13) ஒத்திவைக்கப்பட்டது. மேலும், துணைவேந்தருக்கு தரமான உணவு வழங்கவும், துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதி போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.