வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர்: வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ அலுவலர்கள் ஏற்படுத்திய மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும், அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கேயம் தாலுகா வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் செவிலியர் மணிமாலா (26). இவர் பள்ளி மாணவர்களுக்கான உடல் பரிசோதனை முகாமில் தனது மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரியுடன் பணியாற்றி வந்தார்.
இவர்களுக்குத் தலைமை மருத்துவராகத் தமயந்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் மணிமாலா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைபற்றி காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மணிமாலாவை தற்கொலைக்குத் தள்ளிய மருத்துவ அலுவலர்கள் தமயந்தி, மற்றும் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரை கைது செய்து பணி நீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து மணிமாலாவின் உறவினர்கள், தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
