சுத்தம், சுகாதாரம், கனிவு மற்றும் நோயாளிகளின் மீது அக்கறை இவையெல்லாம் என்னவென்றே கோவை அரசு மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரியாது போலும்..!
கோவை : கோவை அரசு மருத்துவமனைக்கு திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு நாள்தோறும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளி நோயாளிகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட உள் நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.
உடல் நலக்குறைவு, எழுந்து நடக்க முடியாத நிலை போன்ற நிலையில் இருக்கும் நோயாளிகளை ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பல்வேறு ஆய்வுகளுக்காக ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளிகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெட்சர்களையும், லிப்ட்-ஐயும் பயன்படுத்துவது வழக்கம்.
இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்காகவும் மட்டுமே லிப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இயங்காத லிப்ட்

பெண்கள் பொது மருத்துவப் பிரிவிலும் லிப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் கடந்த சில நாட்களாக இயங்காமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் மிகவும் மோசமான உடல் நிலை கொண்ட நோயாளிகளைச் சிகிச்சைக்காக மற்ற வார்டுகளுக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த லிப்ட்-ஐ பழுது பார்க்க மருத்துவமனை நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் தோளில் தூக்கிச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மரணிப்பவர்களின் உடலுக்கும் இதே நிலை தான்.
பரிதாப நிலை
ஒரு நோயாளியைப் படிகளில் இருந்து இறக்கி ஏற்ற 4 நபர்கள் தேவை. மருத்துவமனை பணியாளர்கள் குறைவாக இருக்கும் நிலையில் நோயாளிகளுக்கு உதவி செய்வது முடியாத காரியமாக உள்ளது. இதனால், பல நேரங்களில் நோயாளிகளை அவசர நேரங்களில் படிகளில் இருந்து தூக்கி செல்ல ஆட்கள் இல்லாமல் திணறும் சூழலும் உள்ளது.
இது குறித்து அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் உறவினர் ராஜாமணி என்பவர் கூறுகையில், " நல்ல உடல் நிலையில் இருக்கும் நோயாளிகள் படி ஏறி செல்வது எளிது. ஆனால் நடக்கமுடியாத நிலையில் உள்ள நோயாளிகளை முதல் தளம், இரண்டாம் தளம் என அவசரக்காலங்களில் அழைத்துச் செல்வது சிரமமாக இருக்கிறது. உறவினர்கள் யாரும் உடன் இல்லாத நேரத்தில் பார்ப்பவரை எல்லாம் உதவிக்கு அழைக்கும் நிலை உள்ளது.பல நேரங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள என் உறவினரைப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல மணிக்கணக்காய் காத்திருந்தும் உதவிக்குப் பணியாளர்கள் யாரும் வருவதில்லை.
இந்த கால தாமதத்தால் பரிசோதனையும் தள்ளிப்போகிறது" என்று வேதனையுடன் கூறினார்.
இது தொடர்பாக, அம்மருத்துவமனையின் பொதுப்பணிதுறை உதவி மின்பொறியாளர் பாலன் என்பவரிடம் லிப்ட் பழுது குறித்து சிம்ப்ளிசிட்டி செய்திக்குழுவினர் கேட்ட போது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
வசதி படைத்தவர்களுக்கு தனியார் மருத்துவமனை. ஆனால் வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு உயிர் நாடியாக இருப்பது அரசு மருத்துவமனை. மக்கள் பணிகளை செய்வதற்காக அரசு வேலைக்கு வந்திருக்கும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது இந்த அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்.