நீலகிரி மாவட்டம் கேத்தி செல்லும் வழியில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்பதில் ஊழியர்கள் தாமதம் செய்தனர். இதனால், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி : நீலகிரியில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்பதில் ஊழியர்கள் செய்த தாமதத்தினால், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

ஊட்டியில் இருந்து கேத்தி செல்லும் வழியில் கேத்தி சாட்கட் அருகே சென்று கொண்டிருந்த லாரி கடந்த 31-ம் தேதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளத்தில் விழுந்த லாரியை ஒருவாரத்திற்கும் மேலாக அப்புறப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று எந்தவித முன்னறிவிப்புமின்றி லாரியை மீட்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த மீட்பு பணி காரணமாக அதிகாலை முதலே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் சாலைகளில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, ஒருசில வாகன ஓட்டிகள் எல்லநள்ளியில் இருந்து கேத்தி அச்சனக்கல் வழியாக ஊட்டி வருவதற்குப் பயணிகளிடம் 150 ரூபாய் வசூல் செய்துள்ளனர். பலர் குன்னூரில் இருந்து கட்டபெட்டு சென்று 30 கிலோ மீட்டர் சுற்றி ஊட்டிக்கு வந்தனர்.
இதுமாதிரியான மீட்பு பணிகள் மேற்கொள்ளும் முன் நாளிதழ்களுக்குச் செய்தியோ அல்லது உள்ளுர் தொலைக்காட்சிகளில் முன்னறிவிப்போ செய்து மீட்பு பணி செய்திருந்தால், வாகன ஓட்டிகளும் இவ்வாறு அவதிப்படாமல், முன்னேற்பாடுகள் செய்திருப்பார்கள் என சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.