பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனுவை கோவை ஊழல் மற்றும் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை: பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனுவை கோவை ஊழல் மற்றும் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பேராசிரியர் நியமனத்துக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சுரேஷிடம் இருந்து கணபதி பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், துணைவேந்தர் கணபதி பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்சம் பெற்றது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜாமின் கேட்டு கணபதி தரப்பில் கோவை ஊழல் மற்றும் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, கணபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதேவேளையில், கணபதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, ஜாமின் வழங்கக் கோரி வாதாடினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவக்குமார் வாதாடினார்.
வழக்கறிஞர்களை வாதத்தைக் கேட்ட நீதிபதி ஜான் மினோ, கணபதியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், போலீஸ் காவலில் எடுத்து போலீஸார் அனுமதி கோரியது தொடர்பான விசாரணை நாளை (பிப்.,09) எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
கணபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானபாரதி கூறும்போது, மீண்டும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்படும். எனக் கூறினார்.