டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த திருப்பூர் மாணவனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்: டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த திருப்பூர் மாணவனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய ஆலை உரிமையாளரான பி.செல்வமணி என்பவரின் மகன் சரத் பிரபு (24). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, டெல்லியில் அரசால் நடத்தப்படும் யுனிவர்சிட்டி கல்லூரி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (யுசிஎம்எஸ்) என்ற மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில், கடந்த 7 மாதங்களாகப் படித்து வந்தார். டெல்லி தில்சாத் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர், கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் திருப்பூர் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில், அவரது நெற்றியில் வெட்டுக் காயமும், கழுத்தின் இடது பக்கத்தில் இறுக்கிப் பிடித்ததற்கான அடையாளமும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின. சரத் பிரபுவின் மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. தவிர, பொட்டாசியம் குளோரைடு மருந்து அவரது உடலில் செலுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் மர்மமாக உயிரிழந்த வழக்கு தொடர்பாக 27 நாட்கள் ஆகியும் போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆவணங்கள் எதையும் தர மறுப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார். மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சரத் பிரபு 36 மணி நேரம் பணி புரிய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், 36 மணி நேர பணி நிர்பந்தம் காரணமாக கடும் மன உளைச்சலில் சரத் பிரபு இருந்ததாக அவர் கூறினார்.
மாணவர் சரத் பிரபு இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி மனுதாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்த வழக்கில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் ராம்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். சரத் பிரபு மர்ம மரணம் குறித்த விசாரிக்க டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.