பயணிகளை தரக்குறைவாக நடத்தியாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பயணி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை: பயணிகளை தரக்குறைவாக நடத்தியாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பயணி அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை - மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் பல ஆயிரம் பயணிகள் வேலைக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளிடையே தனியார் பேருந்து நடத்துநர்கள் மீதி சில்லறை தராமலும், தரக்குறைவான வார்த்தைகளாலும் பேசி வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதேபோல, ஒரு சம்பவம் தான் கடந்த சனிக்கிழமை மதியம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் எம். ஜெயக்குமாருக்கு நடந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், "பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனியார் பேருந்தில் (SB_டிரான்ஸ்போர்ட் TN 66 F 5271) பயணித்தேன். பேருந்தில் மொத்தமாக 21 பேர் மட்டுமே பயணித்த நிலையில், யாருக்குமே மீதி பணத்தை தரவில்லை. நான் ரூ. 50 கொடுத்து இரண்டு டிக்கெட் பெற்றேன். ரூ. 26 கட்டணம். உடனே என்னிடம் ஒரு ரூபாய் சில்லறை கேட்டு பெற்ற நடத்துநர், மீதி தொகையான 25 ரூபாயை மூன்று முறை கேட்டும் அப்புறம் தர்றேன் எனக் கூறினார். ஆனால், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்து சேரும் வரையில் தரவில்லை.
உடனே நான் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடத்துநரிடம் கேட்டேன். இத்தனை முறை மீதி தொகைக்காக கெஞ்சனுமா என்றதும், இருந்தா தான் குடுப்போம் என்றார். மற்ற பயணிகளும் சில்லறை வேண்டி கேட்ட போது வாய்த் தகராறு செய்த நடத்துநர் சேக்பரீத், தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தார். மேலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் SB பேருந்தின் ஓட்டுநர் சரவணக்குமார் அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளை பெண்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார்” என்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து பயணி ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், 40 நிமிடத்தில் கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்ல வேண்டும் என இலக்கு வைத்து பேருந்து ஓட்டுநர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது, இதன் காரணமாகவே, நடத்துநர்களும் அவர்களது கோபத்தை மக்களிடம் காட்டுகின்றனர். இதனை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும், என்றனர்.