கோவை, டிசம்பர் 30
சிறுதுளி அமைப்பின் சார்பாக நடத்தப்படும் ‘சிறுவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின்’ ஐம்பதாயிரமாவது மரக்கன்று, சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் திருமதி. வனிதா மோகன் அவர்களால், மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் இன்று நடப்பட்டது.

இவ்வளாகத்தில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ‘கலாம் வனம்’ என்ற பெயரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை, சிறுவாக்கி என்னும் நடவு முறையில் நட்டு வளர்க்க, சிறுதுளி அமைப்பினர் திட்டமிட்டனர். அதனைத்தொடர்ந்து புங்கன், பூவரசு, சிவப்புசந்தனம், இயல்வகை, இலுப்பை, தூங்குவாகை, மகாகனி, ஈட்டி, யானை, குன்றுமணி, வாகை, மஞ்சள்கொன்றை, சரக்கொன்றை, குமிழ், மலைவேம்பு மற்றும் புன்னை போன்ற மரவகைகள் நடப்பட்டன.

ஒரு லட்சம் மரக்கன்றுகளை நோக்கி நடத்தப்படும் இந்நிகழ்வில், சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

சிறுதுளி அமைப்பின் இந்த திட்டத்திற்கு ஏராளமான நாற்றுகள் தேவைப்படுவதால், ‘விதையிலிருந்து விருட்சம்’ என்ற திட்டத்தை கிராம மற்றும் நகர்புற பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்போடு நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதில், நாற்றுகளை உருவாக்குவதற்கான செயல்முறை பயிற்சி மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விதைகள், தாய்மண், உரம் அதற்கான பை ஆகியன வழங்கப்பட்டு, நாற்றுகளாக உருவாக்கி பராமரித்து சிறுதுளி அமைப்பினரிடம் மாணவர்கள் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.