திருப்பூர் அருகே கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், டிசம்பர் 29
திருப்பூர் அருகே கணவன் மனைவி கொடூரமாக வெட்டி கொலை. தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு போலீஸ் வலை விச்சு.
திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் கொடுவாய் சாலையில் குடியிருந்து வந்தவர் முத்துகுமாரசாமி 70 வயது. விவசாயியான இவர் தனது மனைவி தெய்வாத்தாளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் முத்துகுமாரசாமி வீட்டின் கதவு திறந்துகிடந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் உள்ள சமையல் அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது மனைவி தெய்வாத்தாள் வீட்டின் பக்கவாட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இச்சமவம் குறித்து உடனடியாக ரோந்து சென்ற போலீசார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரவு வழக்கம் போல் உறங்க செல்லும் முன் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை வரை ஓடி நின்றது. இதனை அடுத்து அங்கு தங்கி இருந்த வட மாநில இளைஞரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.