வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தீவிர எதிர்ப்பில் ஈடுபடுவார்கள் என ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சியின் தலைவர் இரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் லாபத்திற்காக சில தரப்புகள் தவறான கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசியல் முக்கியத்துவம் மற்றும் லாபம் பெறும் நோக்கில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சென்னை நகரில் அனைத்து சமூகங்களின் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தியதாகவும், அதில் பல சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அழைப்பு பெற்ற சில சமூகங்களும் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 10.5 சதவீத வன்னியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகிய சமூகங்கள் மற்றும் அமைப்புகள் அந்தக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தனி இடஒதுக்கீடு குறித்தே விவாதிக்கப்பட்டதாகவும், மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இந்திய அரசியலமைப்பு மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் விமர்சித்தார்.

தவெக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவர், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அறிவிப்பதன் மூலம் அரசியல் பலன் கிடைக்கும் என்ற நோக்கில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இரத்தினசபாபதி குற்றம்சாட்டினார். தற்போதைய அரசியல் சூழலில் பாமக ஆதரவு தேவைப்படும் என்பதால், அன்புமணி ராமதாஸின் கோரிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே பரிசீலிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.



தமிழகத்தில் 252 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உள்ள நிலையில், வன்னியர் சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு கோரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அரசியல் லாபத்திற்காக இந்த விவகாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.

தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, தமிழகத்திலும் ஒவ்வொரு சமூகத்தினரின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் அரசின் நலத்திட்டப் பயன்பாடு குறித்த தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்த தரவுகளின் அடிப்படையில் உண்மையில் பின்தங்கிய சமூகங்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், கூட்டணி அரசியல் காரணங்களுக்காக தனிப்பட்ட சமூகங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வரை சந்திக்க நேரம் கோரி மனு அளித்துள்ளதாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமாரிடமும் இதுகுறித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளதாகவும் இரத்தினசபாபதி தெரிவித்தார்.

ஒரு சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கும் முடிவை தமிழக அரசு எடுத்தால், மாநிலம் முழுவதும் உள்ள 251 சமூகத்தினரும் தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அவர் எச்சரித்தார்.

மேலும், மாநில அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமான வரம்பை தற்போது உள்ள ரூ.2.5 லட்சத்திலிருந்து, மத்திய அரசின் அளவுகோலான ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...