பவானி ஆற்றில் சாக்கடை நீர், நேரடியாக கலப்பதினால் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை, டிசம்பர் 27
மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் சாக்கடை நீர், நேரடியாக கலப்பதினால் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் சாக்கடை நீர் கலக்காமல் இருக்க மேட்டுப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி பில்லூர் அணையை அடைந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை கடக்கும் பவானி ஆறு சுமார் 40 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையை சென்று அடைகிறது.
தமிழகத்தில் உருவாகி கோவை,ஈரோடு, திருப்பூர் என 3மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2.5 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாவும் விளங்குகிறது.
மலைக்காடுகள் வழியாக பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பவானி ஆறு மக்கள் நெருக்கம் மிக்க மேட்டுப்பாளையம் நகரை வந்தடையும் வரை மட்டுமே அதன் இயற்கை தூய்மை நீடிக்கிறது.
இதன் பின்னர் சுமார் 1.45லட்சம்மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் பகுதியின் ஒட்டு மொத்த கழிவு நீரும் எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல்,நேரிடையாக பவானி ஆற்றில் கலக்கிறது. தினசரி 24 மணி நேரமும் நகர மக்கள் பயன்படுத்தும் அனைத்து சாக்கடை கழிவுகளும் தொடர்ந்து பவானி ஆற்றில் கலந்து வருகின்றன.
சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நகரத்தின் கழிவு நீர் நேரிடையாக பவானியாற்றில் சிறு சிறு வாய்க்கால் போல் ஓடி ஆற்றில் கலக்கின்றன. இதனால் பவானி ஆறு நீர் மிகவும் மாசடைந்து பாழ்பட்டு போகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் “இப்படி ஒட்டு மொத்த கழிவுகள் கலப்பதால் சுகாதாரமற்ற நீராக மாறும் ஆற்று நீரின் பயன்பாட்டால்,பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றனர்.
கழிவு நீர் ஆற்றில் கலக்கும் இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே. சிறுமுகை பேரூராட்சி மக்களுக்கும், சிக்கதாசம்பாளையம்,ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல ஊராட்சிகளைச் சேர்ந்த பலநூறு கிராம மக்களுக்கும் ஆற்றில் இருந்து நீர் ஊறிஞ்சப்பட்டு குடிநீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள நீரேற்று நிலையங்களில் என்ன தான் குளோரின் கலந்துஆற்று நீரை குடிநீராக விநியோகிக்கப்பட்டாலும் அவை முழுமையாக தூய்மை அடைவதில்லை.
இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் ரவி கூறுகையில் ,
“இந்த பகுதியில் வழங்கப்படும் குடிநீரை இரு நாட்களுக்கு மேல் சேமித்து வைத்திருந்தால் தண்ணீர் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல நோய்கள் வருகிறது. குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறோம். கழிவு நீர் கலப்பதை தடுக்க தமிழக அரசாங்கம் சுமார் ரூபாய் 92 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவித்தது அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்,” என்றார்.
பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்று நீரில்குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூட முடியவில்லை. ஆற்றில் இறங்கினால் தோல் அரிப்பு ஏற்படுகிறது, தண்ணீர் என்ற பெயரில் விஷத்தை குடிக்கின்றோம் என்று குற்றம்சாட்டுகின்றனர். கால்நடைகள் பவானி ஆற்று தண்ணீரை குடிப்பதினால் அவற்றுக்கும் நோய் பாதிப்புகள் உள்ளது.
“பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக டிசம்பர் 22-ம் தேதி டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இதற்கான பணிகள் விரைந்து நடக்கும்,” என்று மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அப்துல் ரசீத் தெரிவித்தார்.
இது குறித்து சேவ் பவானி அறக்கட்டளையை சார்ந்த எம். ஜெயகுமார் கூறுகையில், “ இந்த பவானி ஆற்றை பாதுகாக்கவும் தொடர்ந்து மாசடைந்து வருவதை தடுக்கவும் பாதாள சாக்கடை பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும்,” என்றார்.