பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் தாலுகா அரசூர் ஊராட்சிக்குட்பட்ட செங்கோடகவுண்டன்புதூர் மற்றும் முதலிபாளையம் பிரிவு பகுதிகளில், மக்கள் பயன்பாட்டிற்கு உதவாது எனக் கூறப்படும் நடைபாதை மேம்பாலப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பாஜகவினருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கப்பள்ளி–வாளையார் தேசிய நெடுஞ்சாலை (NH-544) வழியாகச் செல்லும் இந்தப் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கவும், வாகனங்கள் தடையின்றி இயங்கவும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தன. வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டகால கோரிக்கையை புறக்கணித்து, மக்கள் பயன்பாட்டிற்கு பயனளிக்காத இரண்டு இடங்களில் நடைபாதை மேம்பாலப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

பெரும்பாலானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையே பயன்படுத்தி வரும் நிலையில், நடைபாதை மேம்பாலம் தங்களது அன்றாட போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யாது என்றும், அதனாலேயே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து,நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு, நடைபாதை மேம்பாலப் பணிகளை தடுத்து நிறுத்தினர். "மக்கள் பயன்படுத்த முடியாத நடைபாதை மேம்பாலம் வேண்டாம்; வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்லக்கூடிய முறையான மேம்பாலமே வேண்டும்" என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பாஜக கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெய்ஹிந்த் ஆர். முருகேசன் மற்றும் பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவினரும் அங்கு திரண்டனர். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் நிலவியது.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலாம்பூர் காவல்துறையினர், மக்களுடன்பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, காவல்துறையினரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திங்கட்கிழமை எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சூலூர் மற்றும் அரசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...