கோவை, டிசம்பர் 11
பாரதி பாசறை அமைப்பு சார்பில் எழுத்தாளர் பெ.சு.மணி-க்கு நேற்று மாலை பாரதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகியும், முண்டாசுக் கவிஞருமான பாரதியாரின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை கொண்டாடும் விதமாகவும், பாரதியார் குறித்த ஆய்வாளரும், எழுத்தாளருமான பெ.சு.மணி அவர்களுக்கு பாரதி விருது வழங்கும் விழாவும் நேற்று மாலை நடைபெற்றது.
பாரதி பாசறை அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
பாரதி பாசறையின் தலைவர் மோகன் சங்கர் பாரதி விருதை பெ.சு.மணிக்கு வழங்கினர்.

தொடர்ந்து பெ.சு. மணி பேசுகையில், "சங்க காலத்தில் அரசு வரிசை அறிதல் முறை வழக்கத்தில் இருந்தது. சிபாரிசின் பேரில் ஒருவரை கவுரவிப்பதை தவிர்த்து, தகுதியான நபர்களை கவுரவிப்பதே இதன் நோக்கம், அதனை பின்பற்றியே தற்போது இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதாக நினைத்து பெருமை கொள்கிறேன். நான் எழுதிய 79 நூல்களில் 29 நூல்கள் பாரதியார் பற்றிய ஆய்வு நூல்கள் ஆகும். தற்போது அதில் 4 நூல்களை பாரதி பாசறைக்கு அளிக்கிறேன். எதிர்காலத்தில் எனது நூல்கள் மற்றும் பாரதியார் எழுதிய பத்திரிக்கைகளையும் வழங்குவேன்" என்று அவர் கூறினார்.
முன்னதாக பாரதியார் ஆய்வாளரான இளசை மணியன் இயற்றிய "நண்பர்கள் நினைவில் பாரதியார்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழார்வளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
