கோவை, டிசம்பர் 9
கோவை அருகே கிறிஸ்துவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாதிரியார் உள்பட ஐந்து பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தம்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் பெந்தகோஸ்தே சபை தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தேவாலயத்தின் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜ் என்பவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் கூடியிருந்த கவிதா, சந்திரசேகரன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியினர், தேவாலயத்தில் உள்ளே புகுந்து சுவரில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி மற்றும் மேசை, நாற்காலிகள் உட்பட பல பொருட்களை அடித்து உடைத்தனர்.

அதோடு, அங்கு இருந்த போதகர் கார்த்திக்கை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பலால் தாக்கப்பட்ட ஐந்து பேரில் ஒரு பெண்ணுக்கு கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, தகவலறிந்து போலீஸார் வருவதற்குள், காவி கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த
சசிகுமார், செல்வம், சந்திரசேகர், கவிதா மற்றும் வினோத்குமார், ஜெயதேவ் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.