திருப்பூர், டிசம்பர் 6
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ரூபாய் 80 கோடி மோசடி செய்ததாக கணவன் மனைவி உட்பட 6 பேர் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த ஆண்டிபாளையம் வரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் . இவர் கடந்த நவம்பர் மாதம் தனக்கு தெரியாமல் தான் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் பெயரில் நிறுவனத்தை துவங்கி துரைசாமி, அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மருமகன்கள் மகேக்ஷ், சண்முக வடிவேல், மேலாளர்களான ராமராஜ்,கண்ணன் ஆகியோர் ரூபாய் 80 கோடி மோசடி செய்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய திருப்பூர் மத்திய பொருளாதார குற்றபிரிவு போலீசாருக்கு உத்தரவுட்டிருந்தது. இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் துரைசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடாசலம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்போதே இசைவு தீர்ப்பாயத்தில் இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாச்சலத்தை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இருதரப்பையும் விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாச்சலம் , வெங்கடாசம் பங்குதாரராக உள்ள நிறுவனத்தை கலைக்க உத்தரவிட்டதோடு ஆடிட்டர்களான லோகநாதன் மற்றும் வெங்கடாச்சலம் ஆகியோர் வரவு செலவு மற்றும் சொத்து கணக்குக்களை ஆய்வு செய்து பங்குதாரர்களுக்குண்டான பிரித்து அளிக்கும் பங்குகள் குறித்தும் இரண்டு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிந்ததது.
இதனிடையே துரைசாமி தம் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுத்திருந்தார். மனுவில் இசைவு தீர்ப்பாயத்தில் சிவில் வழக்காக பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை மறைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளதாகவும் எனவே போலீசாரின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் துரைசாமி உள்ளிட்ட 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க வரும் 12 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.