கோவை, டிசம்பர் 3
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ந. கார்த்திக் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
கோவையில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக விதிமுறையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் 30-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக-வால் வழக்கு தொடரப்பட்டது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள்போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற ஆணையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்டுள்ள கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுக-வினர் மனு அளித்தனர். இருப்பினும், அதிமுக நிர்வாகிகளால் கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் 10 அடி முதல் 30 அடி உயரத்தில் விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் வைக்கப்படும் கட் அவுட்கள், பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற வழக்கு முழு ஆதாரத்துடன் பதியப்படும்.
மேலும், கோவை அண்ணா சிலை அருகே புதிதாக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வைத்திருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.