கோவை, டிசம்பர் 2
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்தவ மாணவர்கள் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வை செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் கிடக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் நவம்பர் 29-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், அரசுடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறாததால் நேற்று முன்தினம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறத காரணத்தால் நேற்று கண்களில் கருப்பு துணி கட்டியும், மனித சங்கிலி போராட்டம் மூலமாகவும் அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.
போராட்டங்களில் எந்தவித பலனும் கிடைக்காத காரணத்தால் மருத்துவ மாணவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று காலை கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தை தொடங்கிய மாணவர்கள், 'எங்கள் போராட்டத்தை அரசு மதித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் போராட்டம் தொடரும்' என்றனர்.