கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோவை : கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயது கூலித்தொழிலாளி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் தொடர்புக்கு சிறுமியின் அண்ணன் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கூலித்தொழிலாளியை குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெளியில் வந்திருந்த சிறுவன் இடையில் தலைமறைவானார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இளஞ்சிறார் நீதிமன்றம் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.