கோவை, நவம்பர் 26
கோவையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் வாலிபர் பலியாகவில்லை என்றும் திமுக எம்.எல்.ஏ. கார்த்தி திட்டமிட்டு வதந்தி பரப்பி வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை வ.ஊ.சி மைதானத்தில் வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அ.தி.மு.க. சார்பில் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் அலங்கார நுழைவு வாயில் வைக்கப்பட்டது.
சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட இந்த நுழைவு வாயில் அருகே நேற்று நள்ளிரவு விபத்து ஏற்பட்டதில் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த உயிர்பலிக்கு அதிமுக-வினர் சாலையை ஆக்கிரமித்து வைத்த அலங்கார நுழைவு வாயில் தான் காரணம் என்றும். அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் புகார் மனு அளித்தார். மேலும், இந்த விபத்திற்கு காரணம் அ.தி.மு.க-வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயில் தான் என்று பொதுமக்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில், அவ்வழியே ஒரு வழிப்பதையில் வந்த டிப்பர் லாரியால் தான் விபத்து ஏற்பட்டது என்றும், விபத்தை ஏற்பட்டுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் மாநகர போலீசார் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், டிப்பர் லாரி மோதிய விபத்தில் தான் ரகுபதி உயிரிழந்தார் என்றும், திமுக எம்.எல்.ஏ திட்டமிட்டு வதந்தி பரப்பி வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. அரசு விழாக்களின் போது இது போன்ற நுழைவு வாயில்கள் அமைப்பது இயல்புதான். ஆனால், இந்த நுழைவு வாயிலால் வாலிபர் உயிரிழக்கவில்லை. அங்கு ஒருவழிப்பாதையில் வந்த லாரியால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. முன்னதாக, உயிரிழந்த அந்த வாலிபர் மது போதையில் வந்ததாகவும் வதந்தி பரப்பப்பட்டது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. கார்த்தி தான் முழு காரணம்.
விபத்தை ஏற்படுத்திய லாரி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானது. அந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு, அதாவது கார்த்தி துணை மேயராக இருந்த போது மாநகராட்சி குப்பை அள்ளுவதற்காக ஒப்பந்தமிடப்பட்டது.
அந்த நிறுவனத்தை விபத்து வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கத்தான் எம்.எல்.ஏ. இந்த வதந்திதை திட்டமிட்டு பரப்பி வருகிறார். இதனை நாங்கள் எதிர் கொள்வோம். இதற்காக தனிக்குழு அமைத்து விசாரணை நடத்துவோம். இதேபோல் தொடர்ந்து வதந்திகள் பரப்பி வந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
ஆர்.கே.நகர் எங்கள் கோட்டை. வருகின்ற இடைத்தேர்தலில் நாங்கள் கட்டாயமாக வெற்றி பெருவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கையில் கட்சியை பெருந்தன்மையோடு ஒப்படைத்தார் ஜானகி. அதே போல் தற்போது உள்ளவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.