கோவை, நவம்பர் 10
ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் விநாயகபுரம் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளஞ்செழியன் என்பவர் பெயரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சேகரன் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகியோர் ரூ. 5000 லஞ்சம் பெற்றதாக கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
காவலர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று காலை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். அப்போது, சேகரன் மற்றும் தனபால் ஆகியோரை வரும் 24-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.