கோவை அரசு மருத்துவமனையில் உள்ள இருப்பிட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அப்துல்கலாம் உருவத்தில் ஒருவர் வந்தார். அவரை பார்த்த பொதுமக்கள் பலரும் வணங்கியதோடு அவரோடு 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.
இதையறிந்த செய்தியாளர்கள் பலரும் அவரிடம் பேட்டி காண திரண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
எனது பெயர் உடுமலை கலாம். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் உருவத்திலே இருப்பதால் என்னை அனைவரும் உடுமலை கலாம் என்றே அழைக்க தொடங்கிவிட்டனர்.
உடுமைலை பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வருகிறேன். அப்துல்கலாம் போன்ற தோற்றம் இருப்பதற்கு எந்த ஒப்பனைகளையும் செய்துகொளவது இல்லை. இயற்கையாகவே எனக்கு அந்த உருவத்தை கடவுள் கொடுத்துள்ளார்.
இரு முறை அப்துல்கலாமை சந்தித்துள்ளேன். அவரைப்போலவே இருப்பதால், என்னை பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு சென்று உரையாற்ற கூறினார். நிதி வசதியும், கல்வியறிவும் இல்லை என்று அவரிடம் கூறினேன். உதவும் இளைஞர்கள் அமைப்புடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தினார். தற்போது அந்த அமைப்பினருடன் சமூகப்பணியாற்றி வருகிறேன்.
இதுவரை 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று கிராமப்புற மேம்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். அதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அப்துல்கலாம் உரையாற்றியது போலவே மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் உரை நிகழ்த்தி வருகிறேன்.
என்னை பார்த்து பலரும் அப்துல்கலாம் என்றே நினைத்து புகைப்படம் எடுத்துகொள்வது பெருமையாகவே உள்ளது. தற்போது இதய சிகிச்சைக்காக கோவை வந்துள்ளேன். இங்கு அரசு மருத்துவ அதிகாரிகளும், பொதுமக்களும் எனக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, திடீரென அப்துல்கலாம் உருவத்தில் வந்த நபரை பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை இருப்பிட அதிகாரி சவுந்திரவேல், உடுமலை கலாம் உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.