தமிழக நலன்களை பாதுகாக்கத் தவறிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தவறியதோடு அதனை மீட்க தவறிய தமிழக அரசு பதவி விலகக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம், மக்கள் மட்டும்மல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்து விட்ட தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். வரிவசூல் என்ற பெயரால் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை உடனிருந்தவர்களும், காவல்துறையினரும் இணைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.