மத்தியில் ஆட்சிசெய்து வரும் பாஜக-வின் ஆதரவுடன் உத்தர பிரதேசத்தில் வெற்றிபெற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடர்ந்து மக்கள் மத்தியில் மதபோதனைகளை தினித்து வருகிறது.
இந்து மத கோட்பாடுகளின் படி செயல்பட்டு வரும் உ.பி. அரசு தொடர்ந்து பிற மதத்தினரை ஒடுக்கும் வகையிலும், மீறும் பட்சத்தில் கலவரங்களை தூண்டும் வகையிலும் கடந்த சில மாதங்களாக தீவிர முறையில் செயலாற்றி வருவதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது, உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலா தல பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் உலகப் புகழ்வாய்ந்த, அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இடம்பெறவில்லை.

அதேநேரத்தில், காசி நகருக்கு அந்த பட்டியலில் முதல் இடமும், அயோத்தி ராம ஜென்ம பூமிக்கு இரண்டாவது இடமும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவுக்கு மூன்றவது இடமும் வழங்கப்பட்டுள்ளது பன்முகம்கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினை மட்டுமே பரப்பும் வகையில் அமைந்துள்ளது.
மொகலாய மன்னர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகவும் தங்களின் காதலின் சின்னமாகவும் தாஜ்மஹாலை கட்டினார். புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், உ.பி அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.