பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தை பசுமைமயமாக்கும் முயற்சியில் கோவை அஞ்சல் கோட்டம் 5000 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளது.
அஞ்சல் வார விழா வரும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் நிலையில் அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடுவதற்கு முயற்சி செய்து வருகிறது.
இதனை மாநில அளவில் நடத்துவதற்கு தமிழக முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் சம்பத் சென்னை கோயம்பேடு அஞ்சலகத்தில் மரக்கன்றுகள் நட்டு துவங்கி வைத்தார்.
தற்போது முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சல் துறைக்கு சொந்தமான காலி இடங்களில் இம்மாத இறுதிக்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அனைத்து அஞ்சலகத்தில் உள்ள காலி இடங்கள் விரிவுபடுத்தப்பட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நட்டி இலக்கினை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை அஞ்சல் கோட்டத்திற்கு சொந்தமான சர்கார் சாமக்குளம், கோவை பிரஸ் காலனி, எஸ்.எஸ் குளம் மற்றும் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆகிய இடங்கள் விரிவுபடுத்தப்பட்டு அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்த காலி இடங்களில் மரம் நடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கே.கே புதூர் பகுதியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சித்ரா தேவி தலைமை தாங்கினார். கோவை முன்னாள் மேயர் வெங்கடாசலம், கவுன்சிலர் காயத்திரி, காவல் ஆய்வாளர் அய்யர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவை வடக்கு உபகோட்ட உதவி கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு செய்திருந்தார்.
பின்னர், விழாவில் பேசிய கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சித்ரா தேவி, கோவை அஞ்சல் கோட்டத்திற்கு மட்டும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், தற்போது இண்டஸ்ரியல் எஸ்டேட், பிரஸ் காலனி, எஸ்.எஸ் குளம் மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் உள்ள அஞ்சல் துறைக்கு சொந்தமான இடங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இத்திட்டம் அடுத்த கட்டமாக கோவை அஞ்சல் கோட்டத்திற்கு சொந்தமான மீதமுள்ள 8 இடங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.