தமிழக கேரள கர்நாடக எல்லையான முச்சந்திப்பில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை பலப்படுத்த மாவோயிஸ்டுகள் சமீப காலமாக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனை தடுக்க இரு மாநில போலீஸார் தீவிர தடுப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நவம்பரில் தமிழக கேரளா வனப்பகுதியான கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில், தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (21.09.2017) தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி அடுத்த அகளி வனப்பகுதியில் மவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரை கேரள போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பரமக்குடியை சேர்ந்தவர் என்றும், இவர் கடந்த 2015ல் கேரள வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளது.