கோவை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் வீடுகளுக்கு வரி மறு சீராய்வு, குடிநீர் வைப்புத் தொகை உயர்வு, குப்பைக்கு வரி விதிப்பு உள்ளிட்ட புதிய வரிகளையும், வரி உயர்வினையும் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது கோவை மாநகரத்தில் உள்ள அணைத்து வீடுகளையும் மறு அளவீடு செய்து 13.5 ஆண்டுகளுக்கான வரி விதிப்பு செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். குடிநீருக்கான வைப்பத் தொகையை ரூ.2 ஆயிரம் முதல் 7500 வரை உயத்தியுள்ளதை திரும்பப் பெற வேண்டும். மேலும், வீடுகளில் குப்பைகளுக்கு ரூ.20 முதல் 200 வரை வரிவிதிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தேர்வு செய்யப்பட்ட மாமன்றம் இல்லாத நிலையில் மக்கள் பிரநிதிகள் மற்றும் மக்களிடம் ஏதும் கருத்துக்களை கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகளே வரிகளை உயர்த்தியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டன உரையாற்றினார். கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி உள்ளிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.