மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23-ம் தேதி சென்னை மெரினாவில், இலங்கையில் கடந்த 2009 -ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதனால், காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்திய திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நேற்று (செப்.,19) உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து அவர்கள் நால்வரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரையும் மே 17 இயக்கத்தினர் மாலை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க வரவேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் திருமுருகன் பேசுகையில், ஜனநாயக ரீதியான தங்களின் போராட்டத்தை தொடரும் என்று உறுதி கூறுகிறோம். தமிழர்கள் மீது இந்திய அரசு யுத்தம் மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் போராட்டம் நடத்துவோம். தமிழினத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தை மே17 இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி மேற்கொள்ளும். மத்திய அரசின் கைப்பாவையாகவும், செயல்படாத அரசாகவும் தமிழக அரசு உள்ளது. தற்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.