கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் அமிர்தா வித்யாலயா என்ற தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் கடந்த 15-ம் தேதி மாயமாகினர். இது குறித்து, மாணவியின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததுடன், பள்ளி சென்ற மாணவிகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, மாணவிகள் இருவரும் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மாணவிகள் இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற இரு மாணவிகளையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முறையான கவுன்சிலிங் பெற்ற பின்னரே மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் மாணவிகளின் படிப்பு பாதிக்கும் என்று கூறியும், உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர் பள்ளி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்போது அமிர்தா வித்யாலயா பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டதன் பேரில் மாணவியை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.