ஆண்டுதோறும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல்நிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் கணேஷுக்கு, சிறப்பாக பணியாற்றியதற்கான முதலமைச்சரின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார்.
விருதுக்கு தேர்வாகியுள்ள காவல் ஆய்வாளர் கணேஷ், நீலகிரி மாவட்டம் தோவாணி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பை முடித்துள்ளார். கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியில் உயர்கல்விப் படிப்பை முடித்த அவர், 1989-92 ஆண்டுகளில் இயற்பியல் இளநிலை படிப்பையும், 1993-94 -ம் ஆண்டுகளில் முதுகலை படிப்பையும் முடித்தார். அதோடு, பி.எட் படிப்பை முடித்த ஆய்வாளர் கணேஷுக்கு, கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, 1997-ம் ஆண்டு தமிழக அரசின் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்ற கணேஷ், கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பந்தயசாலை, வெரைட்டிஹால் சாலை மற்றும் அத்தியாவசிய கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழக அரசின் விருது பெறுவது குறித்து காவல்நிலை ஆய்வாளர் கணேஷ் பேசுகையில், சிறப்பாக பணியற்றியதற்காக இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.