கோவை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (39). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மருத்துவ விடுப்பில் சென்றாதத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் மரக்கடை பகுதியில் நின்று வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, வாகனத் தணிக்கைக்காக நின்றிருந்த பொதுமக்கள் கார்த்திக்கின் பேச்சால், குடிபோதையில் இருப்பதாக சந்தேகமடைந்தனர். அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்ததில் மது அருந்தியதை, அவர்கள் உறுதி செய்தனர்.
பின்னர், இது தொடர்பாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், குடிபோதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் கார்த்திக்கை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இது தொடர்பான மருத்துவ அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க உள்ளனர். போலீஸ் அதிகாரி கார்த்திக் மது அருந்தியது மருத்துவ அறிக்கையில் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும எனத் தெரிகிறது. மேலும். பணி விடுப்பில் இருக்கும் போது, இவ்வாறு நடந்து கொண்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் மது போதையில் வாகனத் தணிக்கை செய்த போலீஸ்காரரால், உள்ள சக போலீசார் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.