நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று சமத்துவ கழகத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'மத்திய, மாநில அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வானது ஏழை எளிய மக்களின் படிப்பையும் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனால் ஏழை மாணவி அனிதா அதிக மதிபெண் பெற்றிருந்தும், மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவை போல யாரும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழக மக்கள் அனைவரும் இதே போல் மொட்டையடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்' என்றார்.