மதுக் கலாச்சாரத்தால் உடல்ரீதியாகவும், உள்ளரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் அதிர்ச்சியுடன் ஆராய்ந்து பார்த்தோமானால் மிக முக்கியமான ஒரு பிரச்சனையாக தெளிவுபெறுவது அரசுக்கான வருமானம்.
டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் தமிழக அரசு இருக்கிறது. அந்த வருவாய் நின்று விட்டால், மக்கள் பணிகளை எப்படி நிறைவேற்றுவது என்பதே தமிழக அரசின் கவலை. "நாங்கள் குடிப்பதை நிறுத்திவிட்டால் நீங்கள் சாப்பிடவே முடியாது" என்று குடிமகன்கள் சிலர் குடிக்காத மகன்களை நோக்கி கிண்டல் அடிக்கும் அளவுக்கு அதனுடைய வருமானம் இந்த ஆட்சிக்கு முக்கியமாகிவிட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கும் கட்சிகளும் அமைப்புகளும் டாஸ்மாக் வருவாய்க்கு மாற்றாக நிறையத் திட்டங்களை பரிந்துரைத்து வருகின்றன.
ஒரே நாளில் மதுவிலக்கைக் கொண்டுவர இயலாது என்றாலும்கூட சிறிது மாற்றங்களின் மூலம் மதுபோதையில் மூழ்கியுள்ளோரை மீட்டெடுக்க முடியும். ஆனால், இங்கோ மதுபோதையில் தமிழகம் தத்தளித்து வருகிறது.
ஒரு தனி மனிதன் தள்ளாடும்போது, ஒரு குடும்பம் தள்ளாடுகிறது. ஒரு குடும்பம் தள்ளாடும்போது, ஒரு சமூகம் தள்ளாடுகிறது. ஒரு சமூகம் தள்ளாடும்போது, ஒரு நாடே தள்ளாடுகிறது. தமிழகம் அப்படி ஒரு தள்ளாட்டத்திலேயே உயிர்வாழ்ந்து வருகிறது என்பதே இங்கு நிதர்சனமான உண்மை.
மதுவால் சீரழியும் தமிழகம்:-
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆட்டோ ஸ்டேன்ட் அருகில் முழு போதையில் இருந்த ஒருவர் பாலத்தின் சுவர் மீது அமர முயற்சி செய்கையில் தவறி கால்வாயில் விழுந்தார்.

நல்ல வேளை, அந்த கால்வாயில் குப்பை நிறைந்திருந்த காரணத்தில் சிறு காயங்களுடன் அந்த நபர் உயிர் தப்பினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கத்திற்கு மாறான ஒன்று நிகழும்போது அதை நம்மக்கள் வேடிக்கை பார்க்க என்றும் தவறுவதில்லை. அவ்வாறே கால்வாயில் விழுந்த நபரை வேடிக்கை பார்க்கவும் மக்கள் குவிந்தனர். இருப்பினும் அவரை மீட்க முட்படவில்லை.
பின் சிறிது நேரம் கழித்து துர்நாற்றம் தாங்காமல் மதுபோதை தெழிந்த அந்த நபரே, கால்வாயில் இருந்து மீண்டு வெளியேறினார்.