கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிவில் பொறியாளர் மற்றும் கட்டிடம் சர்வேயர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.கனகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை நஞ்சுண்டாபுரம் வார்டு எண் 75, கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.

இப்பகுதியில், நீர்நிலை இருந்ததற்கான சான்றாக மாவட்ட நிர்வாகம் ஆவண எண் 149/2பி குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பில் எண் 10 கட்டிடமே இந்த நீர்நிலையினை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகில் ஒரு வணிக வளாகமும் நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளினால் ஒரு நீர்நிலையே மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.கனகசுந்தரம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.