மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் முன்பாக இருந்து ஊர்வலமாக சென்று, அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு வர்ணாசிரம கொள்கைகளை திணிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைப் சேர்ந்த ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 17 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.