பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி முடித்தது உள்ளிட்டு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் மறந்து அதிகமாக கட்சி செயல்பாடுகளில் மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை நினைவுகூறும் வகையிலும் தமிழக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் ஞாபக சக்திகளை அதிகரிக்கும் மாத்திரைகளை அஞ்சல் மூலம் அனுப்பும் போராட்டத்தில் இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அஞ்சல் நிலையத்திற்கு முதலமைச்சருக்கு அனுப்ப வல்லாரை கீரை, வெண்டைக்காய், மாத்திரைகள் உள்ளிட்டவற்றை தமிழ் புலிகள் அமைப்பினர் கொண்டுவந்தனர். அப்பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், போலி டாஸ்மாக் கடைகள், பள்ளி கல்வி துறையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தற்போது உள்ள நிலையில் தமிழக அரசு மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்டு வருகிறது.
எனவே, எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தும் விதமாக தமிழ் புலிகள் சார்பில் வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகளை அனுப்பி வைக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.