கோவை கெம்பட்டி காலணி பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் வீதியில் தங்க நகைபட்டறை நடத்தி வருபவர் குணசேகரன். இந்த நகை பட்டறையில் நாகராஜ் மற்றும் சரவணன் ஆகிய இருவர் நேற்று இரவு பணியில் இருந்தனர். இன்று அதிகாலை சரவணக்குமார் கடைக்கு சென்ற நேரத்தில் நகை பட்டறைக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய்பொடி தூவினர். மேலும், அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த நாகராஜ் அலறித்துடித்தார். அப்போது, நகை பட்டறையில் இருந்த 1.5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கடைக்கு சென்றுவிட்டு நகை பட்டறைக்கு திரும்பிய சரவணகுமார் இரத்த வெள்ளத்தில் இருந்த நாகராஜை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், நகை கொள்ளை போன சம்பவத்தை அறிந்து, பெரிய கடை வீதி போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.