கோவையில் உயர் ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட முகமது ஷானித் எனும் தனியார் கல்லூரி மாணவரை துடியலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 12 கிராம் எடைகொண்ட உயர்ரக (methamphetamine) போதைப்பொருளையும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோபயாலஜி படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர், துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த மாணவரை போலீசார் கண்காணித்து வந்தனர். பெங்கலூர் சென்றிருந்த மாணவர், துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதிக்கு வந்தபோது, போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் (methamphetamine) என்ற உயர் ரக போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அஷ்ரப் என்பவரது மகன் முகமது ஷானித் (வயது22) என்பதும், இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோபயோலஜி நான்காம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், முகமது ஷானித் பெங்களூருக்கு சென்று அங்கிருந்து (methamphetamine) என்ற உயர் ரக போதை பொருளை வாங்கி வந்து, கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்பிளான 12 கிராம் (methamphetamine) போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் யார்? பெங்களூரில் இருந்து மாணவர்களை தொடர்பு கொள்வது யார்? என்பது குறித்த விசாரணையை கோவை மாவட்ட போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர்.