பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உட்மைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி உள்ளிட்ட 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் நிதிஒதுக்கீடு செய்தார்.
இதனையடுத்து பொள்ளாச்சி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக கோவை சாலையில உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
3.2 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 64 கடைகள், 2 தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, பாலூட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவடையும் என நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.