தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு தீர்த்த குடம் எடுத்து பக்தர்களுடன் ஊர்வலமாக வந்தார்.
திருப்பூர்: தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீர்த்த குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் திருக்கோயில் கோவிலின் பங்குனி மாத தீர்த்த திருக்குட திருவிழா ஊர் நாட்டாமை தலைமையில் திமுக நகராட்சி வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பக்தர்களுடன், தானும் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்த மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகரத் துணைச் செயலாளர் பிலோமினா, வார்டு பொறுப்பாளர் மணிமாறன், சுப்பையன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.