பொள்ளாச்சி அடுத்த தேர்நிலையம் பகுதியில் ஏற்கனவே இருந்த காய்கறி மார்க்கெட் பழுதானதால், ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதிகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புதிய காய்கறி மார்க்கெட்டுக்கான கட்டுமான பணிகளை நகர்மன்ற தலைவர் சியாமளா தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி தேர் நிலையம் பகுதியில் பழமை வாய்ந்த காய்கறி மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடைகள் அனைத்தும் பழுதான நிலையில் இருந்தது.
இதன் காரணமாக புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகளுக்காக கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமாளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் சியமளா பேசியதாவது, தற்போது இந்த பகுதியில் புதிதாக 56 கடைகள் கட்டப்பட உள்ளதாகவும் விரைந்து 6 மாத காலத்திற்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரு கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.