கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைப்பயணம், அரசியல் வரலாற்றில், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தெரிவித்துள்ளார்.
கோவை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களை வளர்க்கும் விதமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவின் தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி,எஸ்.டி பிரிவின் தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைப்பயணமான பாரத் ஜோடோ யாத்திரை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும், இந்தியாவில் தற்போது நிலவி வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணமாக ராகுல் காந்தியின் நடைப்பயணம் இருந்தது.
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் வரலாற்றில் பாரத் ஜோடோ யாத்திரை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களை வளர்க்கும் விதமாக செயல்படுவதாகவும், நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை தொழிலாளர்களின் நிலையைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.முன்னதாக கோவை விமான நிலையம் வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.