கோவையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் பொது போக்குவரத்தை காக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் மற்றும் இதர அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 22 இடங்களில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
அதன்படி கோவையிலும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில், "பொது போக்குவரத்தை பாதுகாக்க" என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வ.உ.சி மைதானம் பகுதியில் இந்த மாரத்தான் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சாலை விபத்துகளை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொதுப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்துதல், பலப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் இச்சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட CITU, SFI, ITDP, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியானது வ.உ.சி மைதானம் பகுதியில் துவங்கி, 5 கிலோமீட்டர் சுற்றி வந்து மீண்டும் அதே இடத்தில் முடிந்தது.